டிஸ்கோவில் சில்மிஷம்-2 வாலிபர்களுக்கு முன்ஜாமீன்
சென்னை: சென்னை நட்சத்திர ஹோட்டலில் மாடலிடம் சில்மிஷம் செய்த வழக்கில் வாலிபர்களுக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த சந்திர பிரகாஷின் மனைவி ஜோதி (25). இவர் ஒரு மாடல் ஆவார். கடந்த மாதம் 24ம் தேதி அடையாரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கணவன், மனைவி இருவரும் டிஸ்கோ நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது ஜோதியிடம் இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் சில்மிஷம் செய்தனர். இது குறித்து தேனாம் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அண்ணா நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜூ (24), ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த என்ஜினீயர் ஜெகதீஷ் நவின்குமார் (29) இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். அப்போது ராஜூ, கெகதீஷ் சார்பில் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி,
டிஸ்கோ நடனத்தின் போது ஜோதியின் மீது இருவரும் எதிர்பாராதவிதமாக மோதியதால் அவர்களுக்கு வாய்த் தகராறு ஏற்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த ஒருநாள் கழித்துதான் போலீசில் அவர்கள் புகார் செய்துள்ளனர். வேண்டுமென்றே மனுதாரர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு கூற்பபட்டுள்ளது என்றார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி இரண்டு வாலிபர்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.