கருணாநிதியுடன் எதியூரப்பா சந்திப்பு - சிலை திறப்பு அழைப்பிதழ் கொடுத்தார்
அவருக்கு சென்னையில் நடைபெறவுள்ள சர்வக்ஞர் சிலை திறப்புக்கான அழைப்பிதழை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் அல்சூர் ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை 18 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 9-ந் தேதி திறக்கப்பட உள்ளது.
கர்நாடக அரசே திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை ஏற்று நடத்துகிறது. இதேபோல சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை திறப்பு விழா வருகிற 13-ந் தேதி நடக்க உள்ளது.
திருவள்ளுவர் சிலை திறப்புக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. விழாவை அரசே ஏற்று நடத்துவதால் அழைப்பிதழையும் கர்நாடக அரசே அடித்துள்ளது. கன்னடம் மற்றும் தமிழில் அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவுக்காக முதல்வர் கருணாநிதி பெங்களூர் வந்துள்ளார். பெங்களூர் அருகே உள்ள தனது மகள் செல்விக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியுள்ளார்.
அவரை நேற்று மாலை எதியூரப்பா சந்தித்தார். வீட்டுக்கு வந்த எதியூரப்பாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கருணாநிதியின் மகள் செல்வி, அவரது கணவர் முரசொலி செல்வம் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
முதல்வர்கள் இருவரும் சால்வைகளைப் பரிமாறிக் கொண்டனர். கருணாநிதி எதியூரப்பா மலர் மாலையும் அணிவித்தார்.
பின்னர் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அழைப்பிதழைக் கொடுத்து விழாவுக்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.
அதேபோல சர்வக்ஞர் சிலை திறப்புக்கான அழைப்பிதழை கருணாநிதி, எதியூரப்பாவிடம் வழங்கினார்.
இதையடுத்து இரு தலைவர்களும் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த முதல்வர் எதியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவள்ளுவர் மற்றும் சர்வக்ஞர் சிலை திறப்பு விழா இரு மாநிலங்களுக்கு இடையே உறவுப்பாலமாக அமையும். திருவள்ளுவர் சிலை திறப்பு குறித்து அரசு எடுத்த முடிவுக்கு கர்நாடக மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அழைத்து அவர்களது மனமாற்றத்துக்கு முயற்சிப்பேன்.
திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாது என்றார்.













Click it and Unblock the Notifications