For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்னணு எந்திர முறைகேட்டை நிரூபிக்க தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிபந்தனை

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்: மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நடுநிலையான பொறியாளர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவின் முன் நிரூபிக்க தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு பாமக பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அக் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து வேலூரில் அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,

திமுகவையும், கருணாநிதியையும் எதிர்க்கும் ஒரே கொள்கையுடன் ராமதாஸ் செயல்பட்டு வருகிறார் என்று கலைஞரின் பத்திரிகை பிரச்சாரம் செய்து வருகிறது.

திமுகவை ஒரு கட்சி என்ற முறையிலும், கருணாநிதியை தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்வது என் நோக்கமல்ல. திமுகவின் தவறுகளையும், மக்கள் விரோத கொள்கைகளையும், ஜனநாயக விரோத கொள்கைகளையும், அரசாங்கத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுதும் தான் பாமகவின் செயல்பாடாக இருந்து வருகிறது.

இதேபோல்தான் 2001-06 கால கட்டத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றபோதும், நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டோம்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகிறோம். எங்களை குறை கூறும் திமுக இதற்கு முன்பு போராட்டமே நடத்தியதில்லையா?.

காமராஜர் ஆட்சி நடைபெற்ற போது அவரது அரசை எதிர்த்து திமுக போராடியதில்லையா?. காமராஜரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று கருணாநிதியால் கூற முடியுமா?. விலைவாசி உயர்வு போராட்டம் நடத்தி அண்ணா போன்ற தலைவர்களும் சிறை சென்றிருக்கிறார்கள்.

திமுக செய்தது போலத்தான் நாங்கள் இப்போது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தி வருகிறோம்.

ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பாலாறு, ஆந்திர அரசின் அணை கட்டும் திட்டத்தாலும், மணல் கொள்ளையாலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுநீராலும் இன்றைக்கு பாழ்பட்டு பாலைவனமாகக் காட்சி அளிக்கிறது. இதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே லட்சிய கூட்டணி இருப்பதாக கருணாநிதி கூறுகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் இவர்களுடைய ஆட்சிதான் நடக்கிறது. அப்படியானால் ஆந்திராவின் அணை கட்டும் திட்டத்தை ஏன் இவர்களால் தடுத்து நிறுத்த முடியவல்லை.

இந்தப் பிரச்சனைக்காக பாமகதான் தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதை கண்டித்து வரும் 24ம் தேதி வேலூரில் பாமக சார்பில் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தவிருக்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முறைகேடுகள் குறித்து நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு நாங்களும் பதில் அனுப்பியுள்ளோம்.

நடுநிலையான பொறியாளர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து இந்த புகாரை நிரூபிக்க தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த பதில் கடிதத்தில் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அனுப்பியுள்ள பதில் கடிதத்தையும் பொதுமக்களுக்கு நாளை வெளியிட உள்ளோம் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X