தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
புதுக்கோட்டை: தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு அட்டகாசம் செய்துள்ளனர் இலங்கை கடற்படை வீரர்கள். இதில் 3 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 217 விசைப்படகுகளிலும், ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 115 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த லயோலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அடைக்கலம் (வயது 55), ஜகுபர் சாதிக் (30), விமல்(24) ஆகியோரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அடைக்கலம், ஜகுபர் சாதிக், விமல் ஆகியோர் கடலில் வீசி இருந்த வலையை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர்.
இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தங்கள் கைகளை உயரே உயர்த்தி எங்களை கொன்று விடாதீர்கள். இனிமேல் நாங்கள் இந்த பகுதிக்கு வரமாட்டோம் என்று சத்தம் போட்டு உள்ளனர்.
இருந்தாலும் ஆத்திரம் தணியாத கடற்படையினர் தங்கள் விசைப்படகின் பின்பகுதியால் மீனவர்களின் விசைப்படகை மோதி உள்ளனர். இதில் விசைப்படகின் பலகைகள் உடைந்து படகு சேதம் அடைந்தது.
இதையடுத்து தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை விட்டு விட்டு அவசரமாக கரை திரும்பி உயிர் தப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications