ராகிங்கில் ஈடுபட்டதால் மாணவர்களுக்குள் மோதல் - 19 பேர் கைது
சென்னை: காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ராகிங் செய்த மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதையடுத்து ராகிங்கில் ஈடுபட்ட 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வெளிமாநில மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள், அந்த பகுதியில் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்கி உள்ளனர்.
இரண்டாம் ஆண்டு மாணவர் அர்ஸ் குப்தா, காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் தங்கி இருக்கிறார். இவரை, அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர் அபிகாந்த் உட்பட 6 பேர், கடந்த 3ம் தேதி இரவு கேலி, கிண்டல் செய்தனர்.
இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் அர்ஸ் குப்தா புகார் செய்தார். இதை அறிந்த அபிகாந்த் ஆத்திரத்துடன் குப்தா அறைக்கு நேற்று சென்றார். அங்கு குப்தா இல்லை. ஏனாத்தூரில் மற்றொரு மாணவர் அறையில் குப்தா இருந்தது தெரியவந்தது.
உடனே அபிகாந்த் அவரது நண்பர்கள் 19 பேர் அங்கு விரைந்தனர். குப்தா மற்றும் அவருடன் இருந்தவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் குப்தா, ரிகேஷ் ஆனந்த் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ரிகேஷ் ஆனந்த், மேல்சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அபிகாந்த் உள்பட 19 மாணவர்கள் மீது ராகிங் தடுப்புச் சட்டம், சட்ட விரோதமாக கூடுதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின்னர் அபிகாந்த் உள்பட 19 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.