பன்றிக் காய்ச்சல்: தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தடை!

சேலம் வந்த அமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பன்றிக் காய்ச்சல் அபாயம் தமிழ்நாட்டில் அறவே கிடையாது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் மூலம்தான் அந்தக் காய்ச்சல் நம் நாட்டில் பரவுகிறது. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் பராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து உள்ளது. எனவே தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மேலும் அந்த காய்ச்சலை பரப்பும் வைரஸ்களை கண்டறியும் வசதியும் அரசு மருத்துவமனைகளில் உள்ளன.
தமிழ்நாட்டில் அந்த காய்ச்சல் பரவும் அபாயத்தை தடுக்க வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதன்படி விமான பயணிகள் மற்றும் கப்பல் பயணிகளுக்கு இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த காய்ச்சல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டதில் இருந்து இதுவரை 71/2 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டதும் அவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்கள்.
தற்போது வடமாநிலத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாலும், மராட்டிய மாநிலத்தில் ஒரு மாணவி உயிரிழந்து உள்ளதாலும், ரயில் பயணிகளுக்கும் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
பன்றிக்காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவுவதை தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications