பாரிஸ் விமானத்தில் தீ-8 பயணிகள் காயம்

பாரிஸ் ஒரிலி விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் நாட்டின் வியூலிங் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ-320 விமானம் ஸ்பெயின் நாட்டின் அலிகாண்டே என்ற இடத்துக்குக் கிளம்பத் தயாரானது.
அதில் 169 பயணிகள் இருந்தனர். என்ஜின்கள் வேகமாக இயங்க ஆரம்பித்து விமானம் புறப்பட்டத் தயாரான நிலையில் ஒரு என்ஜினில் தீப் பிடித்தது.
இதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் விமானியை எச்சரி்க்கவே உடனடியாக அவசரக் கதவுகள் திறக்கப்பட்டு சறுக்குப் பாதையை திறந்துவிட்டனர் ஏர்-ஹோஸ்டஸ்கள்.
அதன்மூலம் பயணிகள் முட்டிமோதிக் கொண்டு இறங்க முயற்சித்தபோது 8 பேர் படுகாயமடைந்தனர்.
தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. காயமடைந்த பயணிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஏர்ஹோஸ்டஸ்கள் அலறியபடி ஸ்பானிஷ் மொழியில் பயணிகளை விமானத்திலிருந்து இறங்குமாறு கூறயதால் தான் பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும், பயணிகளில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்களுக்கு ஸ்பானிஷ் தெரியாததால் ஏர் ஹோஸ்டஸ்கள் பேசியது புரியாமல் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடியதால் தான் பலரும் காயமடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து இன்னொரு விமானத்தை அந்த நிறுவனம் அனுப்பியது. ஆனால், பெரும்பாலான பயணிகள் அதில் பயணிக்க விரும்பவில்லை என்று கூறி திரும்பிச் சென்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications