ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரி ரெய்ட்!
சென்னை: நாட்டின் இரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சொந்தமான 25 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.23 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு டைரக்டர் ஜெனரல் கே.கே.திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரியல் எஸ்டேட் மற்றும் அடுக்குமாடி வீடுகளை கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள 2 பிரபல நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் 200க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டார்கள்.
இந்த நிறுவனங்களின் தொடர்புடைய சென்னை, வேலூர், கோயம்புத்தூர், ஹைதராபாத், கொச்சி மற்றும் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மற்றும் பாலி ஆகிய இடங்களில், இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில் பல்வேறு முறைகேடான ஆவணங்களும், கணக்கில் வெளிவராத பண பரிவர்த்தனைகளும் மற்றும் வீடு, நிலம் விற்றது தொடர்பான வெளியில் காட்டப்படாத ரசீதுகளும் சிக்கின.
இவ்வாறாக ரூ.22 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பு செய்யப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, கணக்கில் காட்டப்படாத ரூ.1.5 கோடி அளவிலான நகை, ரொக்கப்பணம் மற்றும் இதர சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications