நீக்கப்பட்ட விமானிகளை மீண்டும் சேர்க்காவிட்டால் ஸ்ட்ரைக்! - ஜெட் ஏர்வேஸ் விமானிகள்
மும்பை: ஜெட் ஏர்வேஸிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து விமானிகளையும் ஒரு வாரத்துக்குள் மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜெட் ஏர்வேஸ் விமானிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தவறினால், தொழில் துறைச் சட்டங்களின் படி நடவடிக்கை மேற்கொள்வோம் (ஸ்ட்ரைக்) என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
நேஷனல் ஏவியேஷன் கில்டு தலைவர் கௌசிக் இதுகுறித்துக் கூறியதாவது:
ஜெட் ஏர்வேஸிலிருந்து நீக்கப்பட்ட விமானிகளை உடனடியாக மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஏழு நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இதற்கு அவர்கள் இணங்காவிட்டால், முழுமையான போராட்டம்தான். தொழில்துறை சட்டங்களுக்குட்பட்ட ஸ்ட்ரைக் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் போராடுவோம்.
நேற்று முறைப்படி ஜெட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், என்றார்.
ஆனால் இந்த நேஷனல் ஏவியேஷன் கில்டை அங்கீகரிக்க மறுத்துள்ளது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம். எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்குமாறு மத்திய அரசைக் கோட்டுக் கொண்டுள்ளார் கில்டின் தலைவர் கௌசிக்.