கன்னடம் செம்மொழி-'எதிர்க்கும் வழக்கை வாபஸ் பெற கருணாநிதி முயல்வார்'
பெங்களூர்: கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க்பபட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வைக்க தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்வார் என்று கன்னட வளர்ச்சிக் கழகத் தலைவர் சந்துரு தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஆனால், சில கன்னட அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களை முதல்வர் எதியூரப்பா மீண்டும் அழைத்துப் பேசுவார். திருவள்ளுவர் மற்றும் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாக்களில் கன்னட சங்கத்தினரும் கலந்து கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழா அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டிருப்பதை கண்டித்து சில அமைப்பினர் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது சரியல்ல.
திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழா அழைப்பிதழ் கன்னடம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் சர்வக்ஞர் சிலைத் திறப்பு விழா அழைப்பிதழும் தமிழ் மற்றும் கன்னடத்தில் அச்சடிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யும். இதில் சந்தேகமில்லை. அவ்வாறு கன்னடத்திலும் அச்சடிக்காவிட்டால் அதை நான் கண்டிப்பேன். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை.
கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காந்தி என்ற வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை வாபஸ் பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுதொடர்பாக நல்ல தகவல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் சந்துரு.
கன்னட அமைப்புகளுடன் எதியூரப்பா பேச்சு:
இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எதியூரப்பா,
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திட்டமிட்டபடி 9ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார். இதை எதிர்த்து சில கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளன. இந்த அமைப்புகளுடன் மீண்டும் பேச்சு நடத்தப்பட்டு சுமூகத் தீர்வு காணப்படும் என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.












Click it and Unblock the Notifications