பஸ்களில் விளம்பரம்-அகற்ற ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஓடும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இடம் பெற்றுள்ள விளம்பரங்களை 2 வார காலத்திற்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பத்தூர் நுகர்வோர் நலம் என்ற அமைப்பைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் இதுதொடர்பாக பொது நலன் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழக மோட்டார் வாகனச் சட்டத்தின் 343வது பிரிவு, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எந்த வகையான விளம்பரமும் இடம் பெறக் கூடாது என்று கூறுகிறது.
ஆனால், சட்டவிரோதமாக, அரசு மற்றும் தனியார்ப் பேருந்துகளில் பெருமளவில் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்களின் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
பஸ்களின் முன்பக்க கண்ணாடி, பின்பக் கண்ணாடி, பக்கவாட்டுக் கண்ணாடிகள் என சகல இடங்களிலும் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் காரணமாக பஸ்சுக்குள் வரும் ஒளியின் அளவு குறைகிறது. டிரைவர்களின் கவனம் சிதறுகிறது. இதனால் பஸ்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் மட்டுமல்லாமல், சாலைகளில் செல்லும் பிற வாகனங்களின் டிரைவர்களும் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் 11 ஆயிரம் பேர் கொல்லப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றன.
எனவே இப்படி சட்டவிரோதமாக இடம் பெற்றுள்ள விளம்பரங்களைஅகற்ற போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யா மற்றும் ராஜ இளங்கோ ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 2 வாரத்திற்குள் இந்த விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். அதன் பின்னர் விளம்பரங்கள் அகற்றப்பட்டது குறித்து அடுத்த 2 வாரத்திற்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டது.