12ம் தேதி மகளிர் சிறப்பு ரயில் - ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்
சென்னை: சென்னையில் மகளிர் சிறப்பு ரயில் சேவையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வருகிற 12ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி, இந்த ரயில் சேவையை டெல்லியிலிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது ப.சிதம்பரம் ரயிலைத் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..
12-ந் தேதி காலை 8.30 மணிக்கு பெண்களுக்கான முதல் மின்சார ரெயில் (மகளிர் மட்டும்) இயக்கப்படுகிறது. தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் இந்த மின்சார ரெயிலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
தாம்பரம்- சென்னை கடற்கரை, அரக்கோணம்-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பெண்களுக்கான சிறப்பு மின்சார ரெயில் வரும் 12-ந் தேதி தாம்பரத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும்.
காலை 8.37 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு பெண்களுக்கான சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படும்.
அதே போல காலை 8.38 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு பெண்கள் மின்சார ரெயில் இயக்கப்படும். காலை 8.39 மணிக்கு வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பெண்களுக்கான சிறப்பு மின்சார ரெயில் புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.