கூடங்குளம் ரஷ்ய என்ஜீனியர் மகள் மானபங்கம்-9 பேர் கைது
கூடங்குளம்: கூடங்குளத்தில் ரஷ்ய பொறியாளரின் மகளிடம் தவறாக நடந்து கொண்டு, பொறியாளரின் காமிராவை பறித்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலைய பணியாளர்கள் குடியிருப்பு அணு விஜய் நகரியத்தில் உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய நாட்டை சேர்ந்த பொறியாளர் அலெக்சாண்டர் சேர்வோ, மற்றும் அவரது மகள் விக்டோரியா ஆகியோர் அணுவிஜய் நகரில் பீச்சில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் சேர்னோவை தாக்கிவிட்டு அவரது காமிராவை பறித்து சென்றது. பின்னர் விக்டோரியாவிடமும் அவர்கள் தவறாக நடந்து கொள்ள முயன்றனர்.
இதுபற்றி அலெக்சண்டர் செர்வோ கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வள்ளியூர் டிஎஸ்பி சுப்பையா தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கூடங்குளம் கடற்கரையோர கிராமங்களில் தீவிர விசாரணை நடந்தது.
இதில் வள்ளியூர் அருகேயுள்ள யாக்கோபுரத்தை சேர்ந்த தினேஷ், முத்து, மணிகண்டன், கிருஷ்ணன், அவரது தம்பி லிங்கராஜன், கணேஷ், பிரதீஷ், சுரேஷ், மற்றொரு மணிகண்டன் ஆகியோர் ரஷ்ய பொறியாளரிடம் காமிராவை பறித்து சென்றது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் கூடங்குளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது,
அணு விஜய் நகரில் இனி பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்திய-ரஷ்ய கூட்டு நடவடிக்கையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால் இங்கு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த காவல் துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.