தலிபான்களுக்குள் வாரிசு சண்டை-மூத்த தலைவர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தலைமைப் பதவிக்கு அங்கு கடும் மோதல் மூண்டுள்ளது. மசூத்தின் வாரிசுகளாக கருதப்படும் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஹக்கீமுல்லா மசூத் என்ற முக்கிய தளபதி கொல்லப்பட்டு விட்டார்.
இதுதொடர்பான தகவலை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.
ஹக்கீமுல்லா மசூத், பைதுல்லா மசூத்துக்கு மிகவும் நெருக்கமானவர். இவர்தான் அடுத்த தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், சுரா எனப்படும் தலிபான் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அதில் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடந்தது.
அப்போது ஹக்கீமுல்லா மசூத் மற்றும் இன்னொரு தளபதியான வலி உர் ரஹ்மான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் மூண்டது. அந்த சண்டையில் ஹக்கீமுல்லா சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.
ஹக்கீமுல்லாவும், ரஹ்மானும் நேருக்கு நேர் சண்டை போட்டுக் கொண்டதாகவும் மாலிக் தெரிவித்துள்ளார். ரஹ்மான் நிலை என்ன என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் வலியுர் ரஹ்மான்தான், ஹக்கீமுல்லாவை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன என்றார் அவர்.
இதற்கிடையே பாகிஸ்தான் அரசின் பிடிவி வெளியிட்ட செய்தியில், சண்டையில் இரு வருமே கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்தது.
கொல்லப்பட்ட ஹக்கீமுல்லா குர்ரம், கைபர், ஓர்க்சாய் மலைப் பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ஆவார். இங்குள்ள தலிபான்களை இவர்தான் இயக்கி வந்தார். பைதுல்லா மசூத்துக்கு மிகவும் நெருக்கமானவர் இவர்.
வலியுர் ரஹ்மான், சுரா கவுன்சில் உறுப்பினர். பைதுல்லா மசூதின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆவார்.
தலிபான்களுக்குள் தற்போது கடும் சண்டை மூண்டுள்ளதால் பாகிஸ்தான் அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.