தமிழகத்தில் 4 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள்!

தேசிய அளவில் மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலான செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் செல்போன் வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் டிராய் வைத்துள்ள புள்ளி விவரப்படி, தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தில் உள்ள செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 4 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் சென்னை நீங்கலாக, தமிழகத்தில் 3.03 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சென்னை வட்டத்தில் 96.51 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
லேன்ட் லைன் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தமிழக வட்டத்தில் 22.24 லட்சம் ஆக உள்ளது. இது கடந்த மே மாதத்தில் 22.36 லட்சமாக இருந்தது. தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னை வட்டத்தில் ஜூன் மாத நிலவரப்படி 14.10 லட்சம் பேர் லேன்ட் லைன் வைத்துள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் போன் இணைப்புகள் வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை 4.36 கோடியாக உயர்ந்துள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் 6.65 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குள் புதிதாக நுழைந்த எம்டிஎஸ் மற்றும் ஐடியா செல் போன் நிறுவனங்கள் ஒரே மாதத்தில் சென்னை உள்ளிட்ட தமிழக வட்டத்தில் 1,21,985 வாடிக்கையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளன.
இதில் எம்.டி.எஸ் நிறுவனத்திற்கு 63 ஆயிரத்து 525 வாடிக்கையாளர்களும், ஐடியாவுக்கு 58 ஆயிரத்து 460 வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
நாட்டிலேயே சென்னை நகரில்தான் போன்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இங்கு போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 131 சதவீதமாக உள்ளது. அதாவது 100 பேருக்கு 131 செல்போன் இணைப்புகள் என்ற அளவில் உள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு மாநில தொலைத் தொடர்பு வட்டம் நாட்டிலேயே போன் வைத்திருப்பவர்கள் வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தைப் பிடித்திருப்பது மகாராஷ்டிரா. இங்கு 5.3 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 3.3 கோடி வாடிக்கையாளர்களுடன் ஆந்திரா 3வது இடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications