ஈவ் டீசிங்: மொட்டை, செருப்பு மாலை-ஒரிசா மாணவிகள் துணிச்சல்
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் கல்லூரி முன் நின்று கொண்டு மாணவிகளை ஈவ் டீசிங் செய்த இரண்டு வாலிபர்களுக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை போட்டு மாணவிகள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். மாணவிகளின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஒரிசா மாநிலத்தில் கைபதர் என்ற பகுதியில் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரிக்கு முன்னதாக தாகா படேல் (22), பிரபுல்லா புயன் (23) என்ற இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு மாணவிகளை கேலி, கிண்டல் செய்தனர்.
இவர்களது நடவடிக்கை அத்துமீற கல்லூரி மாணவிகள் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளனர். ஆனால், பஞ்சாயத்தார் அந்த இரண்டு மாணவர்களையும் எச்சரித்து விட்டு விட்டனர். ஆனால், அந்த வாலிபர்கள் கல்லூரி மாணவிகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்தனர்.
இதையடுத்து கல்லூரி மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். ஆனால், அதற்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவிகள் அந்த வாலிபர்களுக்கு தாங்களே நல்ல பாடம் கற்பிக்க முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து வழக்கம் போல் கல்லூரி வாசலில் நின்று மாணவிகளை ஈவ் டீசிங் செய்து கொண்டிருந்த அவர்களை 100க்கும் மேற்பட்ட மாணவிகள் சுற்றி வளைத்தனர். அவர்கள் இருவரையும் கல்லூரிக்குள் அழைத்து சென்று, அவர்களுக்கு மொட்டை அடித்தனர்.
பின்னர் அவர்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக அழைத்து சென்றனர். அந்த இரண்டு வாலிபர்களும் இனி மேல் இது போல் செய்ய மாட்டோம் என கூறிய பின்னர் அவர்களை விடுவித்தனர்.
ஈவ் டீசிங் செய்தவர்களை சமூகம் தட்டிக் கேட்காததால், அந்தப் பணியை தாங்களே செய்த மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications