திருமங்கலத்தைப் போல கம்பத்தில் திமுகவினர் முறைகேடு - வரதராஜன் புகார்
சென்னை: திருமங்கலத்தில் செய்ததைப் போல கம்பம் தொகுதியில் திமுகவினர் பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக என்.வரதராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கம்பம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளும் திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் கூடலூரில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை விநியோகம் செய்கின்றனர்.
அதேபோல் கொம்பையில் ஆயிரக்கணக்கானோருக்கு மது மற்றும் கறி விருந்து நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட திமுகவினர், வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களுடன் சுற்றுகின்றனர்.
திருமங்கலம் பாணியை கம்பம் தொகுதியிலும் செயல்படுத்த தொடங்கி உள்ளதையே இச்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கண்டிக்கிறது.
தேர்தல் விதிமீறல்களை தொடக்கத்திலேயே தடுக்கவும் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.