சிறுமியை கற்பழித்து கொன்ற சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை
நெல்லை: நெல்லை அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் சிறுவன் ஒருவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
வாசுதேவநல்லூர் ராமுத்தேவர் தெருவை சேர்ந்தவர் வேல்ராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் சந்தன மாலதி. கடந்த 2008 பிப்ரவரி மாதம் 27ம் தேதி விளையாட சென்ற மாலதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாலதியின் பாட்டி மாரியம்மாள் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் சிறுமி சந்தன மாலதி கொலை செய்யப்பட்டு ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள ராப்பை குளத்தில் அவரது உடல் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை செய்தனர்.
இதில் வேல்ராஜீன் பக்கத்து வீட்டை சேர்ந்த அவரது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த தூத்துக்குடி மேலரங்கநாதபுரத்தை சேர்ந்த முருகன் மகன் சிறுமியை அழைத்து சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளி 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்ததால் இந்த வழக்கு நெல்லை சிறுவர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 7ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி அந்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து அவர் வேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications