குடிக்க பணம் கேட்ட தாய்-குடும்பத்துடன் கிணற்றில் குதித்து மகன் தற்கொலை
ஜோலார்பேட்டை: குடிப்பதற்கு பணம் கேட்டு தாயார் செய்த தொந்தரவு காரணமாக ஜோலார்பேட்டை அருகே விவசாயி ஒருவர் தனது மனைவி, குழந்தைகளுடன் கிணற்றில் குதி்த்து தற்கொலை செய்துகொண்டார். ஐந்து உயிர்களை பழி வாங்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம் கிராமத்தில் நடந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள ராமகவுண்டன் தெருவில் ராஜா (30)என்ற விவசாயி வசித்து வந்தார்.
அவருக்கு குப்பம்மாள் (26) என்ற மனைவியும், கோல்ராம் (6), ஜீவிதா (4) மற்றும் தேவதர்ஷின் (1) என மூன்று குழந்தைகளும் இருந்தனர்.
ராஜாவின் தாயார் சுசிலா. கடந்த ஆண்டு ராஜாவி்ன் தம்பி சாமு இறந்து விட்டார். இதையடுத்து சுசிலா குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். தினமும் ராஜாவிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்றும் இது போல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாழ்க்கை வெறுத்து போன ராஜா, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.
குடும்பத்தினர் அனைவருடன் ஊருக்கு வெளியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று காலை கிணற்று பகுதிக்கு வந்த அவர் குடும்பத்தினர் யாரும் உயிர் பிழைத்து தனியாக கஷ்டப்பட கூடாது என நினைத்து அனைவரது கால்களையும் கயிற்றில் கட்டி கொண்டு குடும்பத்துடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்னதாக் அவர் கிணற்று மேட்டில் சிலருக்கு தாங்கள் கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகள் குறித்து கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அதில், சரவணன் அசல் ரூ.500, வட்டி ரூ.300, கடைபாக்கி ரூ.105, மிஷின் செல்வம் அரிசி மற்றும் தவுடு ரூ.900, கடை பாக்கி சசிக்கு கொடுக்கவும், எங்களுக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நாங்கள் இறந்து போன தந்தை, தம்பி சாமுவை தேடி செல்கிறோம். எங்களை மன்னித்துவிடுங்கள் என பென்சிலால் உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் ராஜாவின் வீடு பூட்டியிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை அருகிலிருக்கும் பகுதிகளில் தேடினர். அப்போது ஒருவர் கிணற்றில் அவர்களது பிணம் கிடப்பதாக கிராமத்தில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பிணத்தின் கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுக்கப்பட்டு அவை மீட்கப்பட்டது. அவை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.