வேளாங்கண்ணி கடலில் மூழ்கி புதுக்கோட்டை மாணவர்கள் இருவர் பலி
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்ற புதுக்கோட்டை மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜோசப் கிளாரா. ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் அதே பள்ளியில் படிக்கும் தங்கள் மகன் ஜோசப் லூர்து அலெக்ஸ்(16) மற்றும் 16 மாணவர்களுடன் வேளாங்கண்ணிக்குச் சுற்றுலாவுக்குச் சென்றனர்.
அங்கு முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்த மாணவர்கள் மாலையில் கடலில் குளித்தனர். ஆசிரியை கிளாராவும், அவரது கணவரும் கரையில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அடித்த பெரிய அலை ஒன்று மாணவர்களை இழுத்து சென்றது. மாணவர்கள் தங்களை காப்பாற்றும்படி அபாய குரல் எழுப்பினர். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் மாணவர்கள் சிலரை காப்பாற்றினார்.
ஆனால், ஆசிரியையின் மகன் ஜோசப் லூர்து அலெக்ஸ் மற்றும் மற்றொரு மாணவன் மணிகண்டன் (16) ஆகிய இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேர தேடலுக்கு பின்னர் மணிகண்டனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மாணவன் அலெக்ஸின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வருபவர்கள் கடலில் குளிக்கும் போது தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இன் நடைபெறாமல் இருக்க இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.