மும்பைத் தாக்குதலில் பாக் தொடர்பு - சாட்சியம் அளித்தார் எப்பிஐ அதிகாரி
மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்துதான் வந்தார்கள் என்பது ஜிபிஎஸ் புள்ளிவிவரத் தகவல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எப்பிஐ ஏஜென்ட் மும்பை தனி கோர்ட்டில் சாட்சியம் அளித்துள்ளார்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு மும்பை ஆர்தர் சாலை சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தனி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதில் இன்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயின் தடயவியல் நிபுணர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவர் கூறுகையில், ஜிபிஎஸ் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில், கராச்சியிலிருந்து மும்பைக்கு தீவிரவாதிகள் வந்ததற்கான ஆதாரங்கள் நிரூபணமாகியுள்ளன என்றார்.
இந்த வழக்கில் மேலும் 3 அமெரிக்கர்கள் வாக்குமூலம் அளிக்கவுள்ளனர். வாக்குமூலம் அளிக்கும் அமெரிக்கர்களின் அடையாளங்கள் பாதுகாப்பு காரணமாக வெளியிடப்படாது என அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் அறிவித்துள்ளார்.