கோஸ்டாரிகா அதிபருக்குப் பரவியது பன்றிக் காய்ச்சல்
68 வயதாகும் அரியாஸ், இன்று காலை இருமல் மற்றும் சளியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இத்தகவலை அந்த நாட்டு நாடாளுமன்றத் தலைவர் பிரான்சிஸ்கோ அன்டோனியா பச்சிகோ தெரிவித்துள்ளார்.
பச்சிகோ தொடர்ந்து கூறுகையில், அதிபர் நல்ல நிலையில் உள்ளார். அவரது நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்கு அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார் என்றார்.
அதிபர் அரியாஸ், நோபல் அமைதிப் பரிசைப் பெற்றவராவார். ஹோண்டுராஸ் பிரச்சினையில் இவர் மத்தியஸ்தராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோஸ்டாரிகாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.