சுதந்திர தினம்-தேசியக் கொடி விற்பனை விறுவிறு
சென்னை: நாட்டின் 62வது சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் தேசியக் கொடி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் தேவையை பூர்த்தி செய்ய திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கொடி தயாரிப்புப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன.
சமீப ஆண்டுகளாக சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றை மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், நாட்டுப் பற்றுடனும் கொண்டாடி வருகிறார்கள்.
தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சிகளுக்கு அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளதால் தெரு முனைகள், சங்கங்கள், கிளப்கள், தனியார் நிறுவனங்கள் என எங்கு பார்த்தாலும் கொடியேற்றும் வைபவம் களை கட்டும்.
இதன் காரணமாக கடந்தி சில ஆண்டுகளாகவே கொடிகள் விற்பனை விறுவிறுப்பாகியுள்ளது. இந்த ஆண்டும் கொடி விற்பனை சிறப்பாகவே உள்ளது.
இதுகுறித்து மணிகண்டன் என்ற வர்த்தகர் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளாக கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் நாடு முழுவதிலுமிருந்து பெருமளவில் கொடிகள் கேட்டு ஆர்டர் வரும்.
எங்களது கொடிகளில் 80 சதவீதம் தூய பருத்தியால் ஆனவை. இதுதவிர பாலியஸ்டர் துணியால் ஆன கொடிகள், சிறு கொடிகள், பேட்ஜுகள், தொப்பிகளையும் நாங்கள் தயாரிகக்கிறோம் என்றார்.
தேசியக் கொடி தயாரிப்புப் பணியால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதாம். இந்தப் பணியில் ஈடுபடுவதை தொழிலாளர்களும் புனிதமாக கருதுகிறார்கள். இது வெறும் பணத்துக்காக செய்யும் வேலை அல்ல என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். எனவே தேசப் பற்றுடன் நமது நாட்டுக் கொடியை தயாரிக்கிறோம். இதற்காக பெருமைப்படுகிறோம் என்கிறார்கள்.
இதுகுறித்து உமாராணி என்ற டெய்லர் கூறுகையில், நான் கடந்த 28 ஆண்டுகளாக தேசியக் கொடியை தைக்கும் பணியை செய்து தருகிறேன். இந்தப் பணியை நான் நேசிக்கிறேன். இந்தப் பணி எனக்கு மனரீதியாக திருப்தியைக் கொடுக்கிறது. எனது கடைசி மூச்சு வரை இந்தப் பணியை நான் தொடருவேன் என்கிறார்.
பல்வேறு சைஸ்களில் தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் ஸ்டான்டர்ட் அளவாக 8க்கு 12 அடி என்ற அளவிலான கொடிகளே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. இந்த அளவிலான கொடிகள்தான் குடியரசுத் தலைவர் மாளிகை, அரசுக் கட்டடங்களில் ஏற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, ஒரு புதிர். தற்போது உள்ள இந்திய தேசியக் கொடி, தேசியக் கொடியாக எப்போது ஏற்கப்பட்டது என்பது தெரியுமா...?
1947, ஜூலை 22.












Click it and Unblock the Notifications