4 பெண்களுடன் குடும்பம்-6 குழந்தைகளின் அப்பா கைது
நெல்லை: தன் மனைவி, தம்பி மனைவி ஆகியோருடன் குடும்பம் நடத்திய நபர், மேலும் 2 பெண்களுடன் குடும்பம் நடத்தியதைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு 6 குழந்தைகள் இருக்கின்றனவாம்.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த கபீர் என்பவரது மகன் சேக் முத்தலிப். தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சேக் முத்தலிப்பின் தம்பி ஜாகீர் உசேன் என்பவருக்கு திருமணம் நடத்த பெண் பார்த்தனர். அப்போது சேக் முத்தலிப்பின் மனைவியான ஆயிஷாவின் தங்கை செய்யதலி பாத்திமாவை திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஜாகீர் உசேன்-செய்யதலி திருமணம் நடந்தது.
இதையடுத்து அண்ணனும், தம்பியும், அக்காளும், தங்கையும் சென்னை மண்ணடியில் ஓரே குடும்பமாக இடம் பெயர்ந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் தம்பி ஜாகீர் உசேனை வீட்டை விட்டு துரத்தி விட்டு செய்யதலி பாத்திமாவை சேக் முத்தலிப் தனது மனைவியாக்கி கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அக்காள், தங்கையுடன் குடும்பம் நடந்தி வந்த முத்தலிப்புக்கு வருமானம் போதவில்லை. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சொந்த ஊரான மேலப்பாளையத்திற்கு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வந்தார். இங்கு வந்ததும் ஏற்கனவே தனக்கு பழக்கமான 2 பெண்களுடன் மேற்படி மனைவிகளுக்கு தெரியாமல் மற்றொரு குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவர்கள் பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள்.
சமீபத்தில் இதையறிந்த ஆயிஷாவும், செய்யதலியும் தங்களது கணவரை தட்டி கேட்டனர். இதை கண்டு கொள்ளாத சேக் முத்தலிப், மரியாதையா இருங்க, இல்லை என்றால் நான் வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டை விட்டு போயிடுவேன் என்று மிரட்டியுள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
தங்களது கணவரை இனியும் திருத்த முடியாது என்று முடிவெடுத்த ஆயிஷாவும், செய்யதலி பாத்திமாவும் இதுபற்றி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்கனி விசாரணை நடத்தி சேஷ் முத்தலிப்பை கைது செய்தார்.