ஜப்பானில் கடும் பூகம்பம் - ஒருவர் பலி - 100 பேர் காயம்
டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் ஒரு கடும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம்தான் ஜப்பான் பகுதியில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 10.49 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவுகோலில் 6.5 ரிக்டராக இருந்தது. இதனால் ஜப்பானின் பல பகுதிகள் குலுங்கின.
பூகம்பத்தின் மையப் பகுதி, ஹசிஜோஜிமா என்ற தீவில் இருந்தது. டோக்கியோ உள்பட மத்திய ஜப்பான் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த பூகம்பத்திற்கு ஒருவர் பலியாகியிருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பூகம்பத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
உலகில் நிகழும் பூகம்பங்களில் 20 சதவீதம் ஜப்பானில்தான் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.