ஸ்வைன் ப்ளூ: பெங்களூரில் 'பிரா மாஸ்க்'!
இந் நிலையில் பெங்களூரில் ஒரு பத்திரிக்கை நிருபர், பெண்களின் பிராவை இரண்டாக வெட்டி அதை முகக் கவசம் போல மாற்றி விற்றபோது அதை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றுள்ளனர். அது பிரா என்று தெரியாமல் பலரும் வாங்கி முகத்தில் மாட்டிக் கொண்டனர்.
முகக் கவசங்கள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை தான் என்றாலும் முறையான 'மெடிக்கல் மாஸ்குகளால்' தான் அது சாத்தியம். அதுவும் அந்த முகக் கவசங்களை தினமும் மாற்றிவிட வேண்டும். ஒரே முகக் கவசத்தை மாதக் கணக்கில் அணிவது நோய் பரவலுக்கே வழி வகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆனால், ஸ்வைன் ப்ளூ பீதி காரணமாக வெறும் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட மெடிக்கல் மாஸ்குகள் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. இந் நிலையில் எவ்வளவு காசைத் தந்தாலும் அவை கிடைப்பதும் அரிதாகிவிட்டது.
இந் நிலையில் முகக் கவசம் எதை விற்றாலும் மக்கள் முண்டியடித்தக் கொண்டு வாங்க ஆரம்பித்துள்ளனர். பெங்களூரில் சிவாஜி நகர், இப்ராகிம் சாகிப் தெரு பகுதியில் உள்ள சாதாரண டெய்லர் கடைகளில் சாதாரண துணிகளக் கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான முகக் கவசங்கள் தைக்கப்பட்டு நகர் முழுவதும் விற்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கவசங்களால் எந்தவிதத்திலும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மக்களிடையே முகக் கவசம் குறித்த விழிப்புணர்வு எந்த அளவுக்கு உள்ளதை என்பதை அறிய பெங்களூரில் ஒரு பத்திரிக்கை நிருபர் மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 'பிரா மாஸ்க்கை' விற்றுப் பார்த்தார். ஒரு மணி நேரத்தில் அவர் கொண்டு சென்ற 'பிரா மாஸ்குகள்' அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
தன்னிடம் அதை வாங்கியவர்களை உடனுக்குடன் அவரே விரட்டிச் சென்று உண்மையைச் சொல்லி காசையும் திருப்பித் தந்துவிட்டார் அந்த நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.