மூளைச்சாவு-திருச்சி மாணவன் உடல் உறுப்புகள் தானம்
திருச்சி: திருச்சியில் சாலை விபத்தில் மூளைச்சாவை சந்தித்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை அவனது பெற்றோர் தானமாக வழங்கினர்.
திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு நிர்மல்குமார்(13), பத்மநாபன் என இரு மகன்கள்.
மூத்த மகன் நிர்மல்குமார் கரூரில் இருக்கும் தனது தாத்தா வீட்டில் தங்கி 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வார விடுமுறைக்காக பெற்றோரை பார்க்க தனது தாத்தாவுடன் திருச்சி வந்த நிர்மல் குமார் 9ம் தேதி இரவு காரில் கரூர் திரும்பினர்.
அவருடன் தாத்தா மணி, பாட்டி லெட்சுமி, அத்தை சியாமளா ஆகியோர் சென்றனர். இந்நிலையில் கார் பெருகமணி என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்த போது கரூரில் இருந்து திருச்சி நோக்கி ஜல்லி கற்களை கொண்டு சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சியாமாளா, கார் டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார்கள். மற்ற மூவரும் பலத்த காயத்துடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் மூன்று நாள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் மாணவன் நிர்மல்குமார் மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து டாக்டர்கள் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுவனின் தந்தை வைத்தியநாதன் தனது மகனின் உடல் உறுப்பகளை தானம் வழங்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த சிறுவனின் உடல் திருச்சி ஏபிசி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிறுவனின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன. அவரது கல்லீரல் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மற்ற உறுப்புகள் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தானமாக வழங்கப்பட இருக்கிறது.