இளையான்குடி தேர்தல்-தடைவிதிக்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: இளையான்குடி இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இளையான்குடி சட்டமன்றத் தொகுதியில் மக்கள் மாநாட்டு கட்சி சார்பில் கலைமணி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது வேட்பு மனுவை முன்மொழிந்தவர் தனது மனுவில் வேட்பாளர் பட்டியல் எண்ணை தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி கலைமணியின் மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார்.
இதை எதிர்த்து மக்கள் மாநாட்டு கட்சியின் செயலாளர் சதீஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, வேட்பாளர் கலைமணியின் வேட்பு மனுவை நிராகரித்தது தவறு என்றும், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தொடராமல் அவர் சார்ந்த கட்சி வழக்குத் தொடர தகுதியில்லை என்றும் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து மக்கள் மாநாட்டு கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில், இந்த விவகாரத்தில் வழக்கு தொடர தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கலைமணியின் வேட்பு மனுவை நிராகரித்தது தவறு என்று நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையமும் மேல் முறையீடு செய்தது.
இந்த இரு மேல்முறையீட்டு மனுக்களும் நீதிபதி முருகேசன், நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மக்கள் மாநாட்டு கட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளையான்குடி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரினார். ஆனால் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள் இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.