சிபிஐ வேடம்- லட்சங்களை சுருட்டிய 4 பேர் கைது
சென்னை: சென்னையில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து பொது மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் சமீபகாலமாக ஒரு கும்பல் சிபிஐ அதிகாரிகள் போல் வேடமிட்டு பலரிடம் பணத்தை கொள்ளையடித்து வந்தது. இந்த கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன் பாரிமுனையில் ஒருவரிடம் தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என கூறி அடையாள அட்டையை காட்டி, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டது.
மேலும், அந்த பையில் இருந்த ரூ. 2 லட்சத்தில், 1 லட்சத்தை எடு்த்து கொண்டு போய்விட்டது.
அதே போல் ராயப்பேட்டை உள்ளிட்ட சென்னை நகரின் பல இடங்களில் பலரிடம் பணத்தை கொள்ளையடித்துள்ளது. இந்த கும்பலிடம் ஏமாந்த பலரும் போலீசாரிடம் தற்போது புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் இந்த கும்பலை வளைத்து பிடிக்க உத்தரவிட்டார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை துவக்கினர்.
அப்போது அந்த கும்பல் சேர்ந்தவர்கள் ஆந்திரா மாநிலத்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆந்திர சென்ற போலீசார் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சென்னையில் ஒரு பகுதியில் தங்கியிருப்பது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று அந்த கும்பலை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.