எம்.ஜி.ஆர். சமாதிக்கு வெடிகுண்டு மிரட்டல் - வாலிபர் கைது
சென்னை: வீட்டில் போர் அடித்ததால் சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடம் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என செல்போன் மூலம் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த வேலூர் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 15ம் தேதியன்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், எம்.ஜி.ஆர்.சமாதியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். கடலூரில் உள்ள 55 பேர் பத்திரமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் பத்திரமாக இருக்க மாட்டீர்கள் என்று கூறியுள்ளார் அதில் பேசிய மர்ம நபர்.
இதையடுத்து அண்ணா சதுக்கம் போலீஸாருக்குத் தகவல் பறந்தது. அவர்கள் உடனடியாக சமாதியை முழுமையாக சோதனையிட்டனர். அதில், குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து புரளி கிளப்பிய நபரைப் பிடிக்க வேட்டை முடுக்கி விடப்பட்டது.
சைபம் கிரைம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலு (39) என்பவர் செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
வேலூர் அருகே ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் வேலு, சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு செல்வாராம்.
இந்த முறை சென்னை வந்தபோது செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வீட்டில் இருக்கும்போது நேரம் போகவில்லை-அதனால் விளையாட்டுப் போக்கில் செல்போனில் அப்படி பேசி விட்டேன் என்று கூறியுள்ளார் வேலு.
இதையடுத்து கைது செய்யப்பட்ட வேலு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.