தொண்டாமுத்தூர் - காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறைகள்: பெஸ்ட் ராமசாமி
கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் காற்றில் பறக்கின்றது என்று கொ.மு.க மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி குற்றம் சாட்டினார்.
கோவையில் கொ.மு.க மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறுகையில்,
தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியினர் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளியன்று காலை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பூலுவபட்டி பகுதியில், வாக்காளர்களுக்கு, திமுக -வினர் பணம் கொடுப்பதாக தகவல் வந்தது .
சம்பவ இடத்திற்கு சென்று எங்கள் கட்சியினர் கேட்டபோது திமுகவினருடன் கைகலப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, கொ.மு.க -வை சேர்ந்த வைரவேல், செல்வராஜ், உட்பட நான்கு பேர் மீது, ஜாமீனில் வரமுடியாத வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆளும் கட்சியினர் மீது பெயரளவில் சிறிய வழக்குகளை பதிவு செய்து விட்டனர்.
பணம் பட்டுவாடா, தேர்தல் விதிமீறல் இருந்தால், உடனே தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்கலாம் என்கின்றனர். ஆனால், தேர்தல் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என்பதால், நெருக்கடிக்கு பயந்து இது போன்ற சம்பவங்களை கண்டு கொள்வதில்லை. இதனால் தான் அ.தி.மு.க - தேர்தலில் பங்கு கொள்ளவில்லை போலும் என்றார்.












Click it and Unblock the Notifications