எல்டிடிஇ-யின் புதிய தலைவர் நெடியவன்?- நார்வே அரசு விசாரணை

Subscribe to Oneindia Tamil

ஆஸ்லோ: கேபி என்கிற செல்வராசா பத்மநாதனை கொஞ்சம் கூட விரும்பாத, போர்தான் தமிழீழத்தை அடைய ஒரே வழி என்ற பிரபாகரனின் கொள்கையை முழுமையாக பின்பற்றுகிற, நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் (வயது 32) புலிகள் இயக்கத்தை அடுத்து தலைமையேற்று நடத்தப் போவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நார்வே அரசு அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளது. இருப்பினும் விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.

புலிகள் இயக்கத்திற்கு இப்போது தலைமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் மரணம் என்ற செய்திக்குப் பின்னர் புலிகள் இயக்கத்தின் ஒரு தரப்பு கேபிக்கு பின் அணிவகுத்தது. இதை புலம் பெயர்ந்த தமிழர்களும், பெருவாரியான புலிகள் இயக்க நிர்வாகிகளும் ஏற்காவிட்டாலும் கூட, பின்னர் கேபியின் பின்னால் கிட்டத்தட்ட அனைவருமே ஒன்று திரளத் தொடங்கினர். நாடு கடந்த தமிழீழ அரசை நிர்மானிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில்தான் கேபி கைது செய்யப்பட்டு விட்டார். இதனால் தற்போது புலிகள் இயக்கம் கிட்டத்தட்ட தலைமை இல்லாத நிலையை அடைந்துள்ளது.

யார் அடுத்த தலைவர் என்ற பேச்சு பெரிதாக எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் நார்வேயில் வசித்து வரும் நெடியவன்தான் அடுத்த தலைவராகப் போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

நெடியவன், தீவிர புலிகள் இயக்க பிரமுகர் ஆவார். நார்வேயில் நீண்ட காலமாக வசித்து வருகிறார். கேபியைப் போலவே இவருக்கும் சர்வதேச அளவில் நல்ல தொடர்புகள் உள்ளன.

கேபியை கொஞ்சம் கூட விரும்பாதவர் நெடியவன். பிரபாகரனின் கொள்கைகள் மீதும், அவரது போக்கின் மீதும் முழு நம்பிக்கை கொண்டவர். இடையில் கேபியை ஓரம் கட்டி வைத்திருந்த பிரபாகரன், அவருக்குப் பதில் சர்வதேச பொறுப்பாளர் பொறுப்பை காஸ்ட்ரோவிடம் கொடுத்திருந்தார். அந்த காஸ்ட்ரோவுக்கும், நெடியவனுக்கும் இடையே நல்ல தொடர்புகள் உண்டு.

கேபி புலிகள் இயக்கத்திற்கு தன்னைத் தானே தலைவராக்கிக் கொண்ட போது அதை கடுமையாக எதிர்த்தவர் நெடியவன். கேபியுடன் சேரவே முடியாது என்றும், போர் மட்டுமே நிரந்தர தீர்வு என்றும் தொடர்ந்து கூறி வந்தார் நெடியவன்.

இருப்பினும் கேபியின் சார்பில் பல்வேறு தரப்பினரும் அவரை சந்தித்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறியதைத் தொடர்ந்து கேபியுடன் இணைந்து செயல்பட முன்வந்தார் நெடியவன்.

இந்த நிலையில் தற்போது கேபி கைதாகி விட்டதால் நெடியவன் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது.

நெடியவன் போர் மட்டுமே தீர்வு என்று நம்புகிறவர். உலக அளவில் நல்ல தொடர்புகளைக் கொண்டிருப்பவர், பிரபாகரனின் கொள்ககைள் மீது இன்னும் முழு நம்பிக்கையும், பற்றும் கொண்டிருப்பவர். எனவே புலம் பெயர்ந்த தமிழர்கள் நெடியவனை புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக பார்க்கத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த செய்தியை முதலில் கிளப்பியவர் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத ஆய்வு நிபுணரான ரோஹன் குணவர்த்தனே என்பவர்தான். இவர்தான், புலிகள் இயக்கத்தின் அடுத்த தலைவர் நார்வேயில் இருப்பதாக கூறியிருந்தார்.

கைது - விடுதலை..

இந்த நிலையில் நெடியவனை ஆகஸ்ட் 12ம் தேதி நார்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம், சேதுரூபன் என்பவர் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின்னர் நெடியவன் விடுவிக்கப்பட்டு விட்டாராம்.

புலிகள் இயக்கம் தொடர்பாக நெடியவனிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

அடிக்கு அடி, உதைக்கு உதை என்ற கொள்கையைக் கொண்டவர் நெடியவன். பிரபாகரனின் போர்க்குணம் இவருக்கும் உள்ளதாம். நார்வேயில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தமிழ் வெஸ்ட்லான் பகுதியில் நான்கு பேர் புடை சூழத்தான் உலா வருவாராம் நெடியவன்.

நார்வேயில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக இருக்கிறார் நெடியவன்.

18 வயதாக இருக்கும்போது நெடியவன் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். அவர் உயர் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக புலிகள் இயக்கமே, அவரை ரஷ்யாவுக்கு படிக்க அனுப்பி வைத்தது. இருப்பினும் தனது படிப்பை நெடியவன் முடிக்கவில்லை.

அதன் பின்னர் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவில் இணைந்தார் நெடியவன். எஸ்.பி. தமிழ்ச்செல்வனுடன் இணைந்து தாய்லாந்தில் நடந்த 4வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். பின்னர் ஐரோப்பாவுக்கு இடம் பெயர்ந்தார். நார்வேயை தனது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார்.

நெடியவனின் மனைவி பெயர் சிவகெளரி சாந்தமோகன். கெளரியின் தந்தை ஞானேந்திர மோகன் என்கிற ரஞ்சன் லாலா. இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களில் ஒருவர். பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் ஒருவர்.

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ரஞ்சன் லாலா ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந் நிலையில் நெடியவன் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்படக் கூடும். அதேசமயம், கேபி தன்னைத் தானே தலைவராக அறிவித்துக் கொண்டது போல நெடியவன் செய்ய மாட்டார். சத்தம் போடாமல் நடவடிக்கைகளை முடுக்கி விடுவார், இலங்கையில் மீண்டும் புலிகளை ஒருங்கிணைக்கும் ரகசிய வேலைகளையும் அவர் தொடங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ருத்ரகுமாரனை நாடு கடத்தக் கோரும் இலங்கை..

இதற்கிடையே, நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பிரபல வழக்கறிஞர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.

இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜெயந்த ஞானக்கோன் செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரரான சார்லஸ் ஞானக்கோன் என்பவர் சிங்கப்பூரில் இருந்தபடி புலிகளுக்காக செயல்பட்டு வந்துள்ளார். இந்தத் தகவல்களை கைது செய்யப்பட்டுள்ள கேபி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர விஸ்வநாதன் ருத்ரகுமாரன். இவர்கள் மூவரையும் நாடு கடத்துமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை விட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என்றார்.

ஞானக்கோன் சகோதரர்களில் மூத்தவர் சார்லஸ். இவரைத்தான் சில காலத்திற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்கே, சிங்கப்பூரில் ரகசியமாக சந்தித்து புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயன்றதாக ராஜபக்சே கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது.

ஜெயந்தா ஞானக்கோன் ஏர் சிலோனில் விமானியாக பணியாற்றியவர். மறைந்த ஜெயவர்த்தனேவின் நண்பர் ஆவார். 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்த பின்னர் இவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஜெயந்தா.

சார்லஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர். கடந்த 2005ம் ஆண்டு லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

விடுதலைப் புலிகளுக்காக பெருமளவில் துப்பாக்கிகளை சப்ளை செய்து வந்தவர்.

இவர்கள் தவிர ருத்ரகுமாரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த சட்ட நிபுணர்.

இவர்கள் மூன்று பேரையும் இலங்கைக்கு நாடு கடத்தி கொண்டு வந்து விசாரிக்க இலங்கை அரசு தற்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் அது எளிதாக இருக்குமா என்பது சந்தேகம் என்ற பேச்சு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+