காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் சாவு
சென்னை: சென்னையில் நீலாங்கரை காவல் நிலையத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கை அழைத்து செல்லப்பட்டவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடு்த்து அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவரது மனைவி உஷா ராணி (32). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்த ரமேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார்.
கணவரின் தொல்லை தாங்க முடியாத உஷா ராணி, சென்னை நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அவரை நேற்று இரவு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையின் போது அவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். போலீசார் அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ரமேஷ் வழியிலேயே இறந்தார்.
விசாரணைக்கு வந்தவர் பலியான சம்பவம் பற்றி அறிந்த அடையாறு போலீஸ் துணை கமிஷ்னர் திருஞானம், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரமேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரமேஷின் உறவினர்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அடையார் மருத்துவமனையின் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications