குஜராத் கடலோர பகுதிகளுக்கு லஷ்கர் குறி
அகமதாபாத்: குஜராத் மாநில கடலோர பகுதிகளை லஷகர்-இ-தொய்பா தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியதை அடுத்து, அங்கு பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கோடஸ்வர் பகுதிக்கு வடக்கே இருக்கும் கோரி மற்றும் படாலா நீர் பகுதிகள் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் கொண்டவையாக உள்ளன.
இப்பகுதியில் ஊடுருவும் தீவிரவாதிகள் அருகில் இருக்கும் மாங்குரோவ் காட்டு பகுதிகளுக்கு சென்று ஒழிந்து கொண்டால், அவர்களை தேடிபிடிப்பது கடினம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், குஜராத் மாநில அரசு மற்றும் பல பாதுகாப்பு படை அமைப்புகளுக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இந்த பகுதி வழியாக ஊடுருவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.
மேலும், கோடஸ்வர் மற்றும் மான்ட்வி துறைமுக பகுதிகளை அவர்கள் குறிவைததிருப்பதாகவும், அவர்கள் தங்களது உதவிக்கு சில மீனவர்கள் ஈடுபடுத்தலாம் என்றும்தெரிவித்துள்ளது.
இதையடுத்து குஜராத் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலோர பகுதிகளில் ரோந்து எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் மேற்கு கட்ச் பகுதியில் உள்ள மின் நிலையத்துக்கு அருகில் 9 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.