சென்னையிலிருந்து பயிற்சிக்காக லண்டன் சென்ற இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை
கொல்கத்தா: சென்னை நிறுவனத்திலிருந்து பயிற்சிக்காக லண்டனுக்கு சென்றிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காஜி வாசிம் அக்தர் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் லண்டன் ஹோட்டலில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அவரைக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்காள மாநிலம் சுரி மாவட்டத்தை சேர்ந்தவர் காஜி வாசிம் அக்தர். 25 வயதாகும் இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 6ம் தேதி பயிற்சிக்காக அக்தரை, சென்னை நிறுவனம் லண்டனுக்கு அனுப்பியது. லண்டன் சென்ற அக்தர், அங்கு தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.
இத்தகவலை திங்கள்கிழமை லண்டன் போலீஸார், அக்தரின் தந்தையான அப்துல் மோஹிப்புக்குத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்துல் கூறுகையில், லண்டனுக்கு கடந்த 6-ந் தேதி எனது மகன் அக்தர் சென்றார். அதன் பிறகு பாரீஸ் சென்றுவிட்டு இந்தியா திரும்புவதாக இருந்தது. தினமும் எங்களுடன் தொலைபேசியில் பேசினார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவரிடம் இருந்து எந்த செல்போன் அழைப்பும் வரவில்லை.
நாங்கள் போனில் தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும் இல்லை. எனவே, குழப்பத்தில் இருந்தோம். இந்த நிலையில், திங்கட்கிழமை அன்று லண்டன் போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களை தொடர்பு கொண்டு, எனது மகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். அதனால், நாங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தோம்.
திங்கட்கிழமை இரவு 1 மணி அளவில் மற்றொரு போலீஸ் அதிகாரி பேசினார். எனது மகன் தங்கியிருந்த ஓட்டல் அறையின் படுக்கையில் பிணமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், முழுமையாக விசாரணை நடத்துவதற்கு மூன்று நாட்கள் ஆகும் என்றும், அதன் பிறகு உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார் என்றார்.
அக்தரைக் கொன்றது யார் என்று தெரியவில்லை. எதற்காக கொலை நடந்தது என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து லண்டன் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications