அத்வானி பதவி விலக ஆர்.எஸ்.எஸ். யோசனை
டெல்லி: பாஜகவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். இளம் தலைவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து பாஜகவின் முக்கியத் தலைவர்கள் இன்று சிம்லாவில் ஆலோசனை நடத்துகின்றனர். இந் நிலையில் ஜின்னாவைப் பாராட்டி தான் எழுதிய புத்தகத்தை நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் கட்சியின் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்.
இந்த சலசலப்பு அடங்குவதற்குள் பாஜகவுக்கு புதுத் தலைவரை, இளம் தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறி பாஜகவில் மேலும் கலகலத்தை ஏற்படுத்தியுள்ள ஆர்.எஸ்.எஸ்.
இதுகுறித்து டைம்ஸ் நவ் டிவிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அளித்துள்ள பேட்டியில், கட்சியில் நிலவும் பூசல்கள், கோஷ்டிகளை தவிர்க்க இளம் தலைவரை நியமிக்கலாம். இதுகுறித்து பாஜகதான் யோசிக்க வேண்டும்.
நாங்கள் நினைப்பதை அவர்கள் செய்ய வேண்டும் என்று இல்லை. ஆனால் இளம் தலைமுறையினருக்கு வழி விடுவதே மூத்தவர்களின் பொறுப்பு, உலகம் முழுவதும் உள்ள நடைமுறைதான் இது.
ஆனால் எப்போது, எப்படி, யாரை நியமிப்பது என்பது பாஜகவின் கையில் உள்ளது. அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உடனே செய்வதா அல்லது அடுத்த தலைமுறை சில காலம் காத்திருக்க வேண்டுமா என்பதை அவர்கள்தான் விவாதித்து முடிவு செய்ய வேண்டும்.
இளம் தலைமுறையினர் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்பதை நான் 2003ம் ஆண்டிலிருந்தே சொல்லி வருகிறேன். தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடிய இளம் தலைவர்கள், திறமையானவர்கள் நிறையப் பேர் பாஜகவில் உள்ளனர்.
அதேசமயம், தலைமைப் பதவிக்கு வருவோருக்கென ஒரு சராசரி வயதை கடைப்பிடிக்க வேண்டும். அது 55 முதல் 60 வயதாக இருக்கலாம். ஆனால் 60 வயதைத் தாண்டக் கூடாது என்றார்.
மோகன் பகவத்தின் இந்தக் கருத்தை உடனடியாக வரவேற்றுள்ளார் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி. அவர் கூறுகையில், மோகன் பகவத் கூறியிருப்பது மிகச் சரியான ஆலோசனை. அவரது கருத்தை பாஜகவினர் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
வெங்கையா நாயுடு கூறுகையில், எப்போதுமே முக்கியப் பொறுப்புகளில் இளம் தலைமுறையினரைத்தான் பாஜக தலைமை வைத்துள்ளது. சர்வாதிகாரத்தில் பாஜகவுக்கு ஒருபோதும் நம்பிக்கை கிடையாது என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications