இங்கிலாந்து ஆயுதங்களை வைத்து தமிழர்களை அழித்த இலங்கை

ஈழத்தில் மட்டுமல்லாது, காஸாவிலும் இங்கிலாந்து ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் பெருமளவில் பயன்படுத்தியதாக இங்கிலாந்து எம்.பிக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அப்பாவி மனிதர்களுக்கு எதிரான போர்களில் இங்கிலாந்து தயாரிப்பு ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
பாலஸ்தீனத்தில் காஸா முனையிலும், இலங்கையின் வடக்கிலும் இந்த வகை ஆயுதங்களைத்தான் இரு நாட்டு ராணுவங்களும் பெருமளவில் பயன்படுத்தியுள்ளன.
இலங்கையில், அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் இந்த ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து இலங்கை பெருமளவில் கொள்முதல் செய்துள்ளது. 2006ம் ஆண்டு போர் நிறுத்தம் முறிந்த பின்னர் இந்த ஆயுதங்களை அப்பாவிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் பயன்படுத்தியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டறிகையில் கையெழுத்திட்டுள்ள தொழிலாளர் கட்சி உறுப்பினர் ரோஜர் பெர்ரி கூறுகையில், உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள, சமீபத்தில் சண்டையை நிறுத்தியுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும்போது, அந்த நாடுகளில் இங்கிலாந்து நாட்டு ஆயுதங்கள் எந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இங்கிலாந்து அரசு கண்காணித்து வர வேண்டும்.
காரணம், சண்டை நிறுத்தம் ஒருவேளை முறிவடைந்தால் இங்கிலாந்திலிருந்து வாங்கிய ஆயுதங்களை அந்த நாடுகளின் படைகள் பயன்படுத்தக் கூடும்.
இலங்கையில் நடந்தது அதைத்தான் நிரூபிக்கிறது. எனவே இதுகுறித்து இங்கிலாந்து அரசு மிகவம் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
ஆயுதங்களை விற்பதில் உள்ள லைசென்ஸ் முறையி்ல் விதிகளை இறுக்கமாக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எம்.பிக்கள் குழுவின் கவலைகளை அரசும் பகிர்ந்து கொள்கிறது.
இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட ஆயுத ஏற்றுமதி குறித்த அனைத்து விவரங்களையும் அரசு தீர ஆராய்ந்தது. இந்த ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் இந்த ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
ராணுவ பட்ஜெட்டை அதிகரிக்கும் இலங்கை...
இதற்கிடையே, புலிகளுடனான சண்டை முடிவடைந்து விட்ட போதிலும், ராணுவ பட்ஜெட்டைக் குறைக்காமல் அப்படியே நீட்டிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாம்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கூறுகையில், ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டியுள்ளது. கடனுக்கு வாங்கிய பல்வேறு வகையான தளவாடங்களுக்கான நிலுவைப் பணத்தைத் தர வேண்டியுள்ளது.
எனவே இன்னும் ஒரு ஆண்டுக்கு ராணுவ பட்ஜெட்டைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை.
ஆயுதங்கள் வாங்குவதை நாங்கள் குறைத்துள்ளோம். இருப்பினும் ராணுவ பலத்தை அதிகரிக்க நவீனத் தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டியது அவசியமாகும் என்றார் கோத்தபயா.
ராணுவ பட்ஜெட்டை இதுவரை இல்லாத அளவுக்கு சமீபத்தில் 1.6 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது இலங்கை அரசு என்பது நினைவிருக்கலாம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து பெருமளவில் ஆயுதங்களை வாங்கிக் குவித்திருந்தது. புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர் சீனாவிடம் வாங்குவதாக இருந்த 200 மில்லியன் டாலர் ஆயுதக் கொள்முதலை அது ரத்து செய்து விட்டது.












Click it and Unblock the Notifications