அத்வானி-ராஜ்நாத் போட்ட திசைதிருப்பல் நாடகம்!
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய சிம்லாவில் கூட்டப்பட்ட கூட்டத்தின் முதல் நாளான்று அதைப் பற்றி எதுவுமே பேசாமல் ஜஸ்வந்த் சிங்கை கட்சியை விட்டு நீக்கி தோல்வி விவகாரத்தை அப்படியே அமுக்கிவிட்டது பாஜக.
வாஜ்பாயின் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தேர்தல் தோல்விக்கு அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இதையடுத்து தங்களுக்கு எதிரான இந்த கோஷ்டியை ஒழிக்காவிட்டால் கட்சியில் தங்களது நிலைமை மோசமாகிவிடும் என்பதால் அத்வானி-ராஜ்நாத் இருவரும் கைகோர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அத்வானிக்கும் ராஜ்நாத் சிங்கும் ஒத்துப் போகாது என்றாலும் கூட இந்த விஷயத்தில் இருவருக்குமே பொது எதிரிகள் என்ற வகையில் ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த், அருண் ஷோரி ஆகியோரை ஒடுக்கும் வேலைகளில் இருவரும் இறங்கியுள்ளனர்.
அதன்முதல் படியாகத்தான் ஜஸ்வந்த்தை நீக்கியுள்ளனர். அடு்த்து யஷ்வந்த சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்ட வேறு சிலர் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
ஜஸ்வந்தை முதலில் நீக்கக் காரணம் அவர் அத்வானிக்கு எதிராக நேரடியாக களத்தில் குதித்தது தான் என்கிறார்கள். அத்வானி கோஷ்டியைச் சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகச் செய்ய ஜஸ்வந்த் தரப்பு தீவிரமாக முயன்றது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவரான ஜஸ்வந்த்தை சிங்கை அந்த மாநில முதல்வராக இருந்தபோது ஒடுக்குவதில் தீவிரம் காட்டினார் வசுந்தரா. ஆனால், சட்டமன்றத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக அந்த மாநிலத்தில் தோற்கவே ஜஸ்வந்த் திருப்பித் தாக்க ஆரம்பித்தார்.
வசுந்தராவை நீக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ராஜ்நாத்தும் ஏற்றார். காரணம், அவரையும் வசுந்தரா மதித்ததில்ல்லை. இந் நிலையில் ராஜ்நாத்தும் ஜஸ்வந்தும் சேர்ந்து கொண்டு தனது ஆதரவாளரான வசுந்தராவுக்கு எதிராக காய் நகர்த்தவே, அத்வானி கடுப்பானார்.
இந் நிலையில் ஜஸ்வந்த்-யஷ்வந்த்-அருண் ஷோரின் நிர்பந்ததத்தால் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டிய நிலைக்கு அத்வானியும் ராஜ்நாத்தும் தள்ளப்பட்டனர்.
சிம்லாவில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அத்வானி-ராஜ்நாத் சிங் தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்க எதிர் தரப்பு முயன்றது. இதைத் தவிர்க்கவே அத்வானியும்-ராஜ்நாத் சி்ங்கும் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.
இருவரும் தங்களைக் காத்துக் கொள்ள மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கை காவு கொடுத்துள்ளனர். தேர்தல் தோல்விக்குக் காரணமாகக் கருதப்படும் அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் தரப்பும் இதற்கு முழு ஆதரவு தந்துள்ளது.
மேலும் பாஜகவில் இருந்தாலும் எந்தக் காலத்திலும் ஆர்எஸ்எஸ்துடன் இணக்கமாக இல்லாதவர் ஜஸ்வந்த். இதனால் அவரை நீக்க ஆர்எஸ்எஸ்சி்ன் ஆதரவும் அத்வானிக்கு முழுமையாகக் கிடைத்தது என்கிறார்கள்.