விலை உயர்வு ஏன்?-பிரதமரிடம் சோனியா கேள்வி
டெல்லி: நாட்டில் பணவீக்கமே இல்லாத நிலையில், விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்வது ஏன் என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
மேலும் மக்களை அச்சுறுத்திவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் அதன் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு பற்றி விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது பேச்சின்போது அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் மொத்த விலை குறியீட்டு எண்ணும், பணவீக்கமும் குறைந்துவருவதாக அரசு அறிவித்து வரும் நிலையில், சில்லறை விலை மட்டும் ஏன் உயர்ந்து வருகிறது? என்று வியப்பு தெரிவித்தார்.
வறட்சி நிலவரம் மிகவும் மோசமாக இருப்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், அதே நேரத்தில் நிலைமையை சமாளிப்பதற்காக அரசு முழு வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
பணவீக்கம்- விலைவாசி முரண்பாடுகள் குறித்து விரைவில் விவாதிக்கப்படும் என்றார் பிரதமர்.
பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணைகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக பருப்பு, எண்ணை வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க தீவிர இயக்கம் தொடங்கப்படும் என்றும் மன்மோகன்சிங் உறுதி அளித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற உள்துறை மந்திரி ப.சிதம்பரம், அத்தியாவசிய பொருட்களின் செயற்கை பற்றாக்குறைக்கு காரணமான பதுக்கல், கள்ளச்சந்தையை ஒழிப்பதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வற்புறுத்தினார்.












Click it and Unblock the Notifications