தங்கபாலு சொத்து குவிப்பு-வழக்கு தள்ளுபடி
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் சொத்துக் குவிப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சேலம், மேலூரை சேர்ந்த பழனிவேலு என்ற காங்கிரஸ்காரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், 1984ம் ஆண்டு முதல் 93ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பி னராக இருந்த கே.வீ.தங்கபாலு வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐயிடம் புகார் கொடுத்தேன். நான் கொடுத்த புகார் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை. தங்கபாலு தான் சேர்த்த சொத்து விவரங்களை தேர்தல் கமிஷனிடமும் முறையாக காட்ட வில்லை.
இதுகுறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை முதலில் நீதிபதி சுகுணா விசாரித்தார். சிபிஐ தரப்பில் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்கபாலு மீது கூறப்படும் குற்றச்சாட்டு மத்திய அரசு சட்டத்தின் கீழ் வராது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் மீது கூறப்பட்ட விஷயமாக இருப்பதால், இந்த புகார் நாடாளுமன்ற செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
என்றும், ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சிபிஐ தனது பதில் மனுவில் கூறியிருந்தது. இதன் பின்னர் இந்த வழக்கை 2 நீதிபதிகள் விசாரிக்கும்படி நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
இதையடுத்து தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஊழல் தடுப்பு சட்டப்படி கே.வீ. தங்கபாலு பொது ஊழியராக இருப்பதால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை சிபிஐ விசாரிக்க உரிமை உண்டு என்று மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடினார்.
சிபிஐ தானாகவே இந்த புகாரை விசாரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்கபாலு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி ஆஜராகி, 2004ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் மனுதாரர் இதேபோன்று ஒரு புகாரை கூறினார்.
2009ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் இதே புகாரை கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகவே பொது நல வழக்காக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றார்.
இதையடுத்து இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அப்போது, தங்க பாலுவுக்கு எதிரான சொத்து குவிப்பு குறித்து சிபிஐயிடம் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தங்கபாலுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகக்கான அடிப்படை ஆதாரங்கள் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்பதால், மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தனர்.