ஸ்வைன்-கூடுதல் மருந்து கேட்டு டெல்லி விரையும் பன்னீர்செல்வம்

தமிழகத்தில் பன்றி காய்ச்சலினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 129 பேருக்கு இந்த நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 55 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 74 பேர் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருந்தாலும் தமிழக அரசிடம் போதிய மருந்து கையிருப்பு இருப்பதால் மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளது.
மேலும், பன்றி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்ச்சி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக சுகாதார துறை மேற்கொண்டுள்ளது.
வீடியோ கான்பிரன்சிங் மூலம் டாக்டர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இதில் வெளி மாவட்ட டாக்டர்களின் சந்தேகங்களுக்கு சென்னை டாக்டர்கள் விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று பன்றி காய்ச்சல் தடுப்பு குறித்து ஆலோசிக்கும் தமிழக சுகாத்தார துறையின் கூட்டம் நடந்தது. அதில் சுகாதார துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் பல டாக்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பன்னீர்செல்வம் எந்த வகையான நடவடிக்கை மூலம் இதை முழுமையாக தடுக்க முடியும் என கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து பன்றி காய்ச்சல் குறித்து டெல்லி சென்று விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடு்த்து சுகாதார துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், செயலாளர் வி.கே.சுப்புராஜ், இயக்குனர் டாக்டர் இளங்கோ ஆகியோர் அடங்கிய குழு நாளை டெல்லி செல்கிறது.
இந்த குழுவினர் நாளை மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தை சந்தித்து பேசுகிறார்கள். அவரிடம் தமிழகத்துக்கு கூடுதல் சோதனை கூடம், மருந்து மற்றும் சோதனை உபகரணங்களை கேட்கவுள்ளனர். பின்னர் அங்கு நடக்கும் உயர் மட்டக்குழு கூட்டத்திலும் பங்கேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications