For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலர் டிவி ஊழல் வழக்கு: ஜெ. நிரபராதி - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வழங்கிய விவகாரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

அதேபோல இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட் 7 பேருக்கு தனி நீதிமன்றம் விதித்த தண்டனையையும் அது ரத்து செய்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

1991-96ம் ஆண்டு நடந்த அதிமுக ஆட்சியின் போது, கிராம ஊராட்சிகளுக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக 1996ம் ஆண்டு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா, எஸ்.ஆர்.பாஸ்கரன், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் தலைமை செயலாளர் ஹரிபாஸ்கர் மற்றும் எச்.எம்.பாண்டே உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சென்னை தனி நீதிமன்றம் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

அதேசமயம், செல்வகணபதி உட்பட 7 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 7 பேரும் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதேபோல, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து போலீஸ் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது.

இவ்விரு மனுக்களையும் நீதிபதி ஜெயபால் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், மார்க்கெட் விலையை விட வாங்கிய விலை அதிகம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர்கள் தாக்கல் செய்யவில்லை.

அரசு கலர் டிவிக்களை அதிக விலைக்கு வாங்கியுள்ளது என போலீசார் குற்றச்சாட்டு மட்டும் கூறிவிட்டு, விலைப்பட்டியலை தாக்கல் செய்யவில்லை. ரூ.14,500 விலையுள்ள டிவியை ரூ.16,500 கொடுத்து வாங்கிவிட்டார்கள் என போலீஸ் தரப்பில் கூறியதற்கு ஆதாரமில்லை.

கலர் டிவிக்களை அதிக விலைக்கு வாங்கியதால், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக ஜெயலலிதா உட்பட 10 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை.

விருப்பப்பட்டவர்களை மட்டும் வரவழைத்து டெண்டர் விட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை. வழக்கில் சேர்க்கப்பட்ட எந்த சாட்சியும் அந்தக் குற்றாச்சாட்டைத் தெரிவிக்கவில்லை.

கலர் டிவியை குறைந்த விலைக்கு வாங்க 197 கம்பெனிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்று ஜெயலலிதா நேரடியாக பேச்சு நடத்தினார். இடைத்தரகர்கள், ஏஜென்டுகளை தவிர்க்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என மனுதாரர்கள் தரப்பில் கூறுவது ஏற்கப்படுகிறது.

மொத்தத்தில் போலீஸ் தரப்பில் வைக்கப்பட்ட எந்தக் குற்றச்சாட்டுக்கும் வலுவான உரிய ஆதாரங்களை போலீஸ் தரப்பு தாக்கல் செய்யத் தவறி விட்டது.

எனவே செல்வகணபதி உட்பட 7 பேருக்கு கீழ்கோர்ட் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை ரத்து செய்கிறேன்.

அதேபோல, ஜெயலலிதாவை கீழ்கோர்ட் விடுதலை செய்தது சரியானதுதான். எனவே போலீஸ் தரப்பில் தாக்கல் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X