பாஜக பொதுச் செயலாளர் பதவி தந்தால் விலக வசுந்தரா தயார்
அதேசமயம், பாஜக பொதுச் செயலாளர் பதவியை அவர் கோரியுள்ளார். தனது ஆதரவாளரை ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக பெற்ற பெரும் தோல்விக்குப் பொறுப்பேற்று வசுந்தரா பதவி விலக வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்க வசுந்தரா மறுத்தார்.
இந்த நிலையில் வசுந்தராவுக்கு எதிர் முகாமில் இருந்த ஜஸ்வந்த் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்தப் பின்னணியில், நேற்று டெல்லி வந்த வசுந்தரா அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது சில நிபந்தனைகளையும் அவர் விதித்ததாக தெரிகிறது.
அதன்படி தேசிய அளவில் கட்சியில் தனக்கு முக்கியப் பொறுப்பு தர வேண்டும். தனது ஆதரவாளரை ராஜஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே அவரது நிபந்தனைகள்.
இவற்றை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டு விட்டதா என்பது தெரியவில்லை. ஒருவேளை வசுந்தராவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வசுந்தராவுக்குக் கிடைக்கக் கூடும். அந்தப் பதவியில் தற்போது அருண் ஜேட்லி இருந்து வருகிறார். அவர் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய சந்திப்பின்போது தனக்கு ஆதரவாக இருக்கும் 58 எம்.எல்.ஏக்கள் மற்றும் நான்கு எம்.பிக்களின் கடிதத்தையும் உடன் கொண்டு வந்திருந்தாராம் வசுந்தரா.