கேரள வங்கி கொள்ளையன் சேலத்தில் கைது-6 கிலோ தங்கம் பறிமுதல்
திருவனந்தபுரம்: கேரள வங்கியில் 33 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்தவனை போலீசார் சேலத்தில் கைது செய்தனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் தேக்கல், பெரியங்கா என்ற இடத்தில் வடக்கு மலபார் கிராமிய வங்கி இயங்கி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி நள்ளிரவு வங்கியி்ன் பின்பக்க ஜன்னலை உடைத்து கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வங்கியின் லாக்கரை உடைத்து 33 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 6 லட்சத்து 75 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கேரளாவில் நடந்த இந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவம் மாநிலம முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக கண்ணூர் டிஐஜி டோமின் ஜெ.தச்சங்கரி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக சேலம் அருகேயுள்ள கச்சராபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் என்பதும் கொள்ளைகும்பலுக்கு அவன்தான் கொள்ளை கும்பல் தலைவன் என்பதும் தெரிய வந்துள்ளது. அவனிடமிருந்து 6 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.