கச்சத்தீவுக்கு விநாயகர் சிலையைக் கொண்டு செல்ல முயற்சி - 4 பேர் கைது
ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தியின்போது கச்சத்தீவுக்கு விநாயகர் சிலையைக் கொண்டு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
கச்சத்தீவில் இந்தியாவுக்கு உள்ள உரிமைகளை இலங்கை பறிப்பதைக் கண்டித்தும், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கண்டித்தும், கச்சத்தீவுக்கு செல்ல விடாமல் தடுப்பதைக் கண்டித்தும், கச்சத்தீவு ஒப்பந்தப்படி இலங்கை செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் விநாயகர் சதுர்த்தியையொட்டி கச்சத்தீவுக்கு விநாயகர் சிலையை எடுத்து சென்று பிரதிஷ்டை செய்யப் போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் 2 அடி உயர விநாயகர் சிலையுடன் மதுரையில் இருந்து ரயில் மூலம் நேற்று ராமேசுவரத்துக்கு புறப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
காலை 10.30 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்தில் சிலையுடன் இந்து மக்கள் கட்சியினர் வந்து இறங்கினர். பின்னர் அவர்கள் சிலையை எடுத்துக்கொண்டு கோஷமிட்டபடி ஊர்வலமாக புறப்பட்டு கச்சத்தீவுக்கு செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் இந்து மக்கள் கட்சியினர் 4 பேரை கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் சிறப்பு அனுமதி பெற்று அக்னி தீர்த்த கடற்கரைக்கு கொண்டு சென்று விநாயகர் சிலையை கரைத்தனர். இதனால் நேற்று ராமேசுவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.