ஜப்பான் அடுத்தடுத்து 2 பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை
டோகியோ: ஜப்பானில் 6.8 மற்றும் 6.5 ரிக்டர் அளவிலான இரண்டு பூகம்பங்கள் அடுத்தடுத்த ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் நடக்கும் அதிபயங்கர பூகம்பங்களில் 20 சதவீதம் ஜப்பானில் தான் நடக்கிறது. இதற்கு இந்த நாடு பசிபிக் மற்றும் பிலிப்பைன் கடல் தட்டுக்கள் எனப்படும் இரண்டு நில தட்டுகளுக்கு இடையில் அமைந்துள்ளது தான் காரணம்.
இதனால் அங்கு அடிக்கடி பூகம்பம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5.36 மணிக்கு ஜப்பானின் இஷிகாஹி ஜிமா என்ற தீவில் சுமார் 6.8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது முடிந்த சில மணி நேரங்களில் அடுத்த பூகம்பம் அந்த தீவை தாக்கியது. இது 6.5 ரிக்டர் அளவாக பதிவானது.
இந்த இரண்டு பூகம்பங்களும் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது உடனே திரும்ப பெறப்பட்டது. சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த பூகம்ப அலைகள் தைவான் நாட்டிலும் உணரப்பட்டதாகவும், ஆனால் அங்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது.