மசூத்தின் மாமனார், மைத்துனர் உள்பட 4 பேரை கொன்ற தலிபான்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவர் பைதுல்லா மசூத்தின் இருப்பிடத்தை அமெரிக்கப் படைகளுக்கு காட்டி கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து மசூத்தின் மாமனார் உள்ளிட்ட நான்கு உறவினர்களை தலிபான்கள் படுகொலை செய்து விட்டனர்.
இத்தகவலை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.
பைதுல்லா மசூத்தை சமீபத்தில் அமெரிக்க படைகள் ஏவுகணை வீசிக் கொன்றன. இதை தலிபான்கள் மறுத்து வருகின்றனர். அவர் உயிருடன்தான் இருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் ஹக்கீமுல்லா மசூத் என்பவர் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மசூத் கொல்லப்பட்டது உறுதியானது.
இந்த நிலையில் மசூத்தின் இருப்பிடத்தை அவரது மாமனார் உள்ளிட்ட நான்கு உறவினர்கள்தான் காட்டிக் கொடுத்ததாக தலிபான்கள் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து மாமனார் இக்ரமுதீன், அவரது மகன், இக்ரமுதீனின் சகோதரர்களில் ஒருவர், ஒரு உறவினர் ஆகிய நான்கு பேரை தலிபான்கள் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து நான்கு பேரையும் கொன்று விட்டனர்.
பைதுல்லா மசூத் கொல்லப்பட்டதை உறுதி செய்த தரப்பே, இந்தத் தகவலையும் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாக ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 5ம் தேதி தெற்கு வசிரிஸ்தானில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு மசூத் வந்து இரவில் தங்கியிருந்தபோதுதான் அவரை அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் கொன்றது.
மசூத்தின் 2வது மனைவியின் வீடு இது. 2வது மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அங்கு இரவில் தங்கினார் மசூத். ஆனால் அதுவே அவருக்கு கடைசி இரவாகி விட்டது.
இந்தத் தாக்குதலில் மசூத்தின் மாமனார் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் உயிருடன் இருந்தது பின்னர் தெரிய வந்தது. ஆனால் தற்போது தலிபான்களே மாமனாரையும், உறவினர்களையும் கொன்று விட்டனர்.
தற்போது தலிபான்களின் புதிய தலைவராகியுள்ள ஹக்கீமுல்லா மசூத், கொல்லப்பட்ட மசூத்தின் ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.