16 வயது சிறுமியைக் கற்பழித்து சீரழித்த தந்தை, சித்தப்பா
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தந்தை மற்றும் சித்தப்பாவிடம் சிக்கி கற்பழிப்புக் கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமான 16 வயது சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர். தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
உ.பி. மாநிலம் ஹிங்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நீத்து. இவரது தாயார், நீத்துவுக்கு சிறு வயதாக இருந்தபோதே இறந்து விட்டார்.
இந்த நிலையில் நீத்துவின் தந்தை சொந்த ஊரை விட்டு வெளியேரி நாக்பூருக்கு வந்து விட்டார். அங்கு நிர்மலா என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகளும் பிறந்தன. ஆனால் நீத்துவின் தந்தையின் போக்குப் பிடிக்காமல் நிர்மலா வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
நீத்து, சொந்த ஊரில் தனது சித்தப்பாவுடன் தங்கியிருந்தார். சுல்தான்பூரில் 8வது வரை படித்தார். தாயார் இறந்து விட்டதாலும், தந்தை ஓடிப் போய் விட்டதாலும், சித்தப்பாவின் நிழலை அண்டியிருந்த நீத்து, படிப்பை நிறுத்தி விட்டார். வீட்டு வேலைக்குப் போய் வந்தார்.
இந்த நிலையில்தான் தனது சித்தப்பாவால் கற்பழிக்கப்பட்டார் நீத்து. இதை வெளியில் சொல்லக் கூடாது என்று நீத்துவின் சித்தப்பா மிரட்டியிருந்தார். இதனால் வெளியில் சொல்ல முடியாமல் அந்த காமக் கொடூரனிடம் சிக்கித் தவித்தார் நீத்து.
இந்த நிலையில் தனது தந்தையின் இருப்பிடம் அவருக்குத் தெரிய வந்தது. அவரைத் தொடர்பு கொண்டு சித்தப்பா செய்து வரும் கொடுமைகளைக் கூறி கதறி அழுதார்.
இதைக் கேட்டதும் நீத்துவின் தந்தை விரைந்து வந்தார். மகளை மீட்டுக் கொண்டு நாக்பூருக்குத் திரும்பினார். சித்தப்பாவின் கொடும் பிடியிலிருந்து மீண்டு விட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நீத்து.
ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத வகையில் சித்தப்பா செய்த வேலையை அவரது தந்தையும் செய்யத் தொடங்கியதால் உடைந்து போய் விட்டார் நீத்து.
வந்தேவி என்ற சேரிப் பகுதியில் நீத்துவுடன் ஒரு குடிசையில் வசித்து வந்தார் அவரது தந்தை. குடிசையை விட்டு மகளை வெளியே அனுப்ப மாட்டார். இதனால் அக்கம் பக்கத்து குடிசைவாசிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், நீத்துவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் குடிசைப் பகுதியைச் சேர்ந்த ஷேக் ராஜு, ஹமீதா பேகம், குரேஷி ஆகியோருடன் சேர்ந்து மகளை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார் நீத்துவின் தந்தை.
அங்கு நீத்து கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் நீத்துவின் தந்தையுன் கிளினிக்குக்கு வந்த ஷேக் உள்ளிட்டோருக்கு சந்தேகம் எழுந்தது.
அடுத்த நாள் நீத்துவின் தந்தை வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து குடிசைப் பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் நீத்துவை அணுகி என்ன நடக்கிறது என்று கேட்டபோது உண்மையைக் கூறி கதறியுள்ளார் நீத்து.
அதிர்ச்சி அடைந்த குடிசைவாசிகள், நீத்துவின் தந்தை திரும்பி வந்ததும், அவரை அடித்து நொறுக்கி விட்டனர். போலீஸாருக்கும் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து அடிபட்டு காயமடைந்து கிடந்த நீத்துவின் தந்தையை மீட்டு கைது செய்தனர்.
கடந்த ஒரு வருடமாக சித்தப்பா மற்றும் தந்தையிடம் சிக்கி சீரழிந்து வந்த நீத்து தற்போது மகளிர் முகாம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.