ஒரிஸ்ஸா ரயிலில் குண்டுவெடிப்பு-மாவோயிஸ்ட் சதி?
புவனேஸ்வர்: ஹாதியா-புவனேஸ்வர் இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் நேற்றிரவு குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு மாவோயிஸ்ட்டுகள் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஒரிஸ்ஸா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 48 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஜார்க்கண்ட மாநிலம் ஹாதியா பகுதியில் இருந்து ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வருக்கு விவசாயிகளின ரதம் என்றழைக்கப்படும் குறைந்த கட்டணம் கொண்ட எக்ஸ்பிரஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த ரயில் ரூர்கேலா நகருக்கு அருகே நேற்று இரவு வந்த போது ஜி 9 என்ற பெட்டியில் உள்ள கழிவறையில் குண்டு வெடித்துள்ளது.
ஆனால், இந்த சம்பவம் இன்று காலை அந்த ரயில் புவனேஸ்வர் ரயில் நிலையத்துக்கு வந்த பின்னரே வெளியில் தெரிந்துள்ளது. கழிவறைகளை அலசிவிட சென்ற ரயில்வே தொழிலாளி இதை பார்த்து ரயில்வை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவம் நடந்த போது அந்த பெட்டியில் யாரும் இல்லை என்பதாலும், வெடித்த குண்டு அதிக சக்தி அற்றது என்பதாலும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
தற்போது போலீசார் மோப்ப நாய் சகிதம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு ரயிலுக்குள் வைக்கப்பட்டிருந்ததா அல்லது யாரும் ஓடும் ரயில் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் யாரும் வெடிகுண்டை வீசினார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.