தமிழகத்தி்ல் குறுவை சாகுபடி குறையும்!!
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் வழக்கத்தை விட 57 ஆயிரம் ஏக்கர் நிலம் குறைவாக சாகுபடி செய்து வருவதாக என்று வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் பயிர், நிலங்களை தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
திருவாரூர் மாவட்டத்தில் சராசரி ஆண்டு மழை அளவு 1,230 மிமீ ஆகும். ஆனால், நடப்பு ஆண்டில் இதுவரை 343 மிமீ மட்டுமே பெய்துள்ளது.
இங்கு மொத்த சாகுபடி பரப்பு மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 43 ஏக்கர். இதில் 25 ஆயிரம் ஏக்கர் மட்டும் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்ய முடியும். மீதமுள்ள மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 43 ஏக்கர் நிலம் ஆற்று தண்ணீரை நம்பி தான் இருக்கிறது.
நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பான 90 ஆயிரம் ஏக்கரில் 33 ஆயிரத்து 175 ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 ஆயிரத்து 750 ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் கிடக்கின்றன.
இதை ஈடு கட்டும் வகையில் சம்பா சாகுபடி மூன்று லட்சத்து 28 ஆயிரத்து 868 ஏக்கரில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரம் போன்றவைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது வரை வணிக வங்கிகள் மூலம் ரூ 104.3 கோடியும், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ 16.78 கோடியும் என மொத்தம் ரூ 121.08 கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.